அமித் ஷா எந்த கட்சியையும் குறிப்பிட்டு அழைக்கவில்லை: அண்ணாமலை!

அதிமுகவையோ அல்லது குறிப்பிட்டு எந்த கட்சியையோ அமித் ஷா அழைக்கவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட நாளை பாஜக கூட்டணியில் இணையலாம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

டெல்லியில் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்று 15 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களும், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஒருவரும் என 16 பேர் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இவர்கள் அனைவரும் மூத்த தலைவர்கள். மோடி 3-வது முறையாக பிரதமராக வரவேண்டும் என்ற ஒருமித்தகருத்துடன் இவர்கள் அனைவரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையை ஏற்று யார் வந்தாலும், அவர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறந்திருக்கும் என்றுதான் அமித்ஷா கூறியிருக்கிறார். அவர் அதிமுகவையோ அல்லது குறிப்பிட்டு எந்த கட்சியையோ சொல்லவில்லை. நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள்கூட நாளை வந்து இணையலாம். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு எல்லோருக்கும் திறந்திருக்கிறது என்பதுதான் அமித்ஷாவின் பதில்.

திமுகவும், பாஜகவும் கொள்கை ரீதியாக இரு துருவங்களாக இருக்கிறோம். எனவே, அவர்கள் தே.ஜ. கூட்டணிக்கு வரப்போவதில்லை. அப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை. கூட்டணிக்கு எத்தனையோ கட்சிகள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேரமும் காலமும் வரும் போது அனைவருக்கும் தெரியும். நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக கூட்டணிக்கு இழுக்கவில்லை. விருப்பமுள்ளவர்கள் மட்டும் எங்களுடன் பயணம் செய்கிறார்கள்.

முதல்வர் 3 முறை வெளிநாடு பயணம் சென்றிருக்கிற காரணத்தால், அவர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சென்னையில் 200-வது தொகுதியில் நடைபெறும் என் மண் என் மக்கள் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் வருகிறார். அன்றைய தினம் கட்சி நிகழ்ச்சியில் பங்கெடுக்கிறார். 50 ஆண்டுகாலம், தான் அரசியலில் இருப்பதாக டி.ஆர்.பாலு கூறுகிறார். அரசியலில் எத்தனை ஆண்டுகள் இருந்தோம் என்பது முக்கியமில்லை. எப்படி இருந்தோம் என்பது தான் முக்கியம். டி.ஆர்.பாலு ஊழல்வாதி மட்டுமல்ல, அவர் தரம் தாழ்ந்த ஒரு அரசியல்வாதி. வினாசகாலம் விபரீத புத்தி என்பது சரியாக டி.ஆர்.பாலுவுக்கு பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார்.