அரசியலை தத்துவ மேதை அரிஸ்டாட்டில் பார்வையில் தான் பார்த்ததால் அரசியலுக்கு வந்தேன்: அண்ணாமலை!

அரசியலுக்கு வருவதற்கு பதிலாக சமூக சேவையே செய்திருக்கலாமே என்று மாணவன் ஒருவன் கேட்ட கேள்விக்கு தனது பாணியில் பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அரசியலை அரிஸ்டாட்டில் பாணியில் தான் பார்ப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது மாணவர்களுடன் அவர் கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அப்போது பல மாணவர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் ஒவ்வொன்றாக பதிலளித்து வந்தார்.

இந்நிலையில், ஒரு மாணவன், அண்ணாமலையை பார்த்து, “ஏன் நீங்கள் ஐபிஎஸ் வேலையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தீர்கள்? மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் சமூக சேவை செய்திருக்கலாமே.. அரசியலுக்கு வந்ததற்கான காரணம் என்ன?” எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது:-

நீங்கள் எப்படி அரசியலை பார்க்கிறீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. நான் எப்படி பார்க்கிறேன் என்று சொல்கிறேன். உங்களுக்கு பிடித்திருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அரசியலை இரண்டு விதமாக மக்கள் பார்க்கிறார்கள். பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இப்படி கூறுவார்.. “உலகத்தில் உள்ள கேடுகெட்ட மனிதர்களும், இழிவான மனிதர்களும் எங்கு இருக்கிறார்கள் என்று தேடி பார்த்தால், அவர்கள் அரசியலில் இருப்பதை கண்டுபிடிக்க முடியும். தரம்கெட்ட மனிதர்களின் கடைசி புகலிடம் அரசியல்” என்று கூறியவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஆனால், தத்துவ மேதை அரிஸ்டாட்டில் அதை வேறு விதமாக பார்க்கிறார். “மனிதநேயத்தின் உச்சம் என்பது அரசியலாக தான் இருக்க முடியும்” என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார். நான் அரசியலை வின்ஸ்டன் சர்ச்சில் பார்ப்பதை போல பார்க்கவில்லை. அரிஸ்டாட்டில் பார்ப்பதை போல பார்க்கிறேன். உலகம் முழுவதும் நீங்கள் பாருங்கள். திறமையானவர்கள் அனைவரும் அரசியலில் இருப்பார்கள். எல்லா நாடுகளிலும் 40 – 45 வயதுக்கு பிறகு பெரும்பாலானோர் தங்கள் தொழிலை விட்டுவிட்டு அரசியலில் ஈடுபடுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்கிறார்கள். உலகம் முழுவதும் இப்படிதான் இருக்கிறது. இந்தியாவை தவிர.

இந்தியாவில் மட்டும் இந்த குடும்ப அரசியல் காரணமாக பொதுவான மனிதர்களால் அரசியலுக்கு நுழைய முடியவில்லை. உங்களுக்கும் சரி, எனக்கு சரி, குடும்ப அரசியலை உடைத்து உள்ளே போவது என்பது பாறாங்கல்லில் போய் தலையை முட்டுவதை போன்றது தான். நான் இப்போது முட்டிக் கொண்டிருப்பதை போல. முதலில் உடையப் போவது பாறாங்கல்லா அல்லது என் தலையா என்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஆனால், பொதுவான மனிதன் உள்ளே நுழையாத வரை அரசியலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவே முடியாது.

அதனால் நான் அரசியலை அசிங்கமாகவோ, சாக்கடையாகவோ பார்க்கவில்லை. நான் இதை அழகான பயணமாக பார்க்கிறேன். அரசியலில் இருந்தால் உங்களால் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இப்போதும் நான் கல்வி என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். சேவையாற்றி வருகிறேன். அது வேறு. அரசியல் வேறு. மாணவர்களாகிய உங்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், அரசியலுக்கு வாருங்கள். வருவதற்கு முன்பு உங்கள் தேவைகளை நிறைவு செய்து கொள்ளுங்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அரசியலுக்கு வாருங்கள். வாழ்நாள் முழுவதும் சேவையாற்ற வேண்டும் என்ற முடிவுடன் வாருங்கள். எம்.பி. ஆக வேண்டும், எம்எல்ஏ ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அரசியலுக்கு வராதீர்கள். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.