பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தி தலைமையிலான நடைப்பயணத்தில் இன்று பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தனது சகோதரர் ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களின் நடைப்பயணத்துக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் உடல்நிலை சரியானவுடன் நடைப்பயணத்தில் இணையவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் ஒற்றுமை நீதிப் பயணம் கடந்த மாதம் மணிப்பூரில் தொடங்கியது. அஸ்ஸாம், மேகாலயா, மேற்குவங்கம், ஜார்கண்ட் மாநிலத்தை தொடர்ந்து பிகாரில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றுடன் பிகார் பயணத்தை முடிக்கும் ராகுல் காந்தி, மாலை உத்தரப் பிரதேச மாநிலத்துக்குள் நுழையவுள்ளார். பிரியங்கா காந்தி, உத்திர பிரதேசத்தில் உள்ள சந்தௌலியில் தனது சகோதரர் ராகுலின் நடைப்பயணத்தில் இன்று பங்கேற்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.