ராமேசுவரம் மீனவர் 3 பேருக்கு சிறை தண்டனை: இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!

வெளிநாட்டு மீன்பிடித் தடைச் சட்டத்தின் கீழ், ராமேசுவரம் மீனவர்கள் 3 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து இலங்கையின் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளுக்கு அபராதம் விதிப்பதுடன், கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறைத் தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம் இலங்கை மீன்வளத் துறைசார்பில் 2018 ஜன. 24-ல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டோர், மீண்டும் எல்லைதாண்டி வந்தால் சிறைத் தண்டனை என்ற நிபந்தனையின் அடிப்படையில் இதுவரை விடுதலை செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில், எல்லை தாண்டி வரும் விசைப்படகுகளின் ஓட்டுநர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கும் நடைமுறையை தற்போது இலங்கை அரசு தொடங்கியுள்ளது.

கடந்த பிப். 3-ம் தேதி ராமேசுவரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஜேம்ஸ், சகாயராஜ் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், அவற்றிலிருந்த 23 மீனவர்களை கைதுசெய்தனர். அவர்கள் மீதான வழக்கு விசாரணை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதி பாலன், 20 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இதில், 2-வது முறையாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மெல்சன் என்பவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தார். மேலும், இரு விசைப்படகுகளின் ஓட்டுநர்களான ராபர்ட்,பெக்கர் ஆகியோருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த 2 பேரும் முதல்முறையாக எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கைப்பற்றப்பட்ட 2 படகுகளின் உரிமையாளர்களும் மே 6-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.