விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளை (பிப்.19) சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை காலை 9 மணி அளவில் நடைபெற உள்ளது. நமது கழகத்தின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதலே அரசியல்ரீதியான நிகழ்வுகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்த நடிகர் விஜய், கடந்த பிப்.2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். முன்னதாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்தார். விஜய்யின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இன்னொருபுறம், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அவரது கட்சியின் பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் கட்சியின் உட்கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பாக நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.