தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது: கடம்பூர் ராஜூ

தி.மு.க.வை எதிர்க்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்று கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கை பின்வரிசைக்கு மாற்றப்பட்டதால், அவர் ஏமாற்றத்தின் விளிம்பில் விரக்தியில் பேசி வருகிறார். தி.மு.க.வை எதிர்க்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சி தலைவராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். தி.மு.க.வுடன் கூட்டணியில் சேர்வதற்காக நடிகர் கமல்ஹாசன் அ.தி.மு.க.வை விமர்சித்துள்ளார். அவரது கருத்தை பெரிதாக எடுத்து கொள்ள வேண்டியது இல்லை.

தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெற்ற பிறகு அறிவிக்கப்படும். தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு தொகுதி ஒதுக்காவிட்டாலும்கூட அதே கூட்டணியில் தொடர்வோம் என்று ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறியதன் மூலம், தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இணைந்து விட்டதாகத்தான் அர்த்தம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி.யை எதிர்த்து அ.தி.மு.க. வேட்பாளர்தான் நிறுத்தப்படுவார். இந்த தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.