பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கர்நாடக தலைநகர் பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் அமைந்து இருக்கிறது ராமேஸ்வரம் கபே உணவகம். பல்வேறு இடங்களில் கிளை பரப்பி இருக்கும் இந்த உணவகம் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும். வழக்கம்போது நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான், ஒரு அதிர்ச்சி சம்பவம் அங்கு அரங்கேறியது. அதி பயங்கர சத்தத்துடன் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதன் காரணமாக அந்த உணவகம் புகை மண்டலமாக காட்சியளித்தது. ஓட்டல் கண்ணாடிகள், தரையில் இருந்த கிரானைட் கற்கள் உடைந்து சிதறின. உணவகத்தில் அதிர்ச்சியில் உணவுப்பொருட்களை அப்படியே போட்டுவிட்டு பதறியடித்து வெளியே ஓடினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெண், உணவக ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். காவல்துறை மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் உணவகத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் உணவகத்தின் கை கழுவும் பகுதியில் குண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. அங்கிருந்த ஒரு பையில் ஒரு அடையாள அட்டை, பேட்டரி, இரும்பு போல்டு ஆகியன இருந்தன. அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோப்ப நாய்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.
பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று மாலையில் இருந்தே இரவு முழுவதும் விடிய விடிய வாகன சோதனை தீவிரமாக நடைபெற்றது. பிரதான சாலைகள் மட்டுமின்றி அனைத்து சாலைகளிலும் தெருவுக்கு தெரு போலீஸ் நின்று சோதனை மேற்கொண்டு உள்ளனர். ஆண்கள் மட்டும் பயணித்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி பைகளை தணிக்கை செய்து விபரங்களை சேகரித்த பிறகே அனுப்பி இருக்கிறார்கள்.
பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் தங்கி இருக்கும் லாட்ஜூகள் மற்றும் தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக யாரேனும் ஊடுருவி இருக்கிறார்களா? என்பது பற்றி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை மாநகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி இருக்கும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரேனும் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்டறிய அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீசார் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அதிகளவிலான லாட்ஜுகள் இருக்கும் சென்னை எழும்பூர், திருவல்லிக்கேணி மற்றும் கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய பகுதிகளில் உள்ள லாட்ஜூகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது அங்கு தங்கி இருந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டு உள்ளது.