ஓ.பி.எஸ். அணியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஈபிஎஸ் அணியில் சேர்ந்தார்!

ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த வீகேபி சங்கர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் அணியின் நெல்லை மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தவர் விகேபி சங்கர். இவர் முன்னாள் அதிமுக எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியனின் மகன். நெல்லை மாவட்ட அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த கருப்பசாமி பாண்டியன், அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்தார். எம்ஜிஆர் ஆதரவாளராக அதிமுகவில் இருந்து பல்வேறு பதவிகளை வகித்தவர் கருப்பசாமி பாண்டியன். 1977 முதல் பல தேர்தல்களில் வென்று எம்.எல்.ஏ ஆகியுள்ளார். 2000ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்த கருப்பசாமி பாண்டியன் திமுக எம்.எல்.ஏவாகவும் வெற்றி பெற்றார். பின்னர், தனது மகன் சங்கருக்கு திமுகவில் மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார்.

பின்னர் 2015ல் மீண்டும் அதிமுகவில் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன், டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராக சசிகலா நியமித்ததால் கட்சியில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். அங்கும் தனக்கு முக்கியத்துவம் கிடைக்காததால் 2020ல் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அவரது மகன் விகேபி சங்கரும் அதிமுகவில் செயல்பட்டு வந்தார். அதிமுகவில் இருந்து வந்த வீகேபி சங்கர், ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டு, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பின்னர், அவரது அணியில் இணைந்தார். அவருக்கு ஓபிஎஸ் அணியில் நெல்லை மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

மக்களவை தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ள நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கிறார். விரைவில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் தரப்புக்கு சீட் ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்திகள் வரும் நாட்களில் நடைபெற உள்ளன. இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் நெல்லை மாவட்டச் செயலாளராக இருந்த வீகேபி சங்கர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் விலகி, எடப்பாடி பழனிசாமி பக்கம் சேர்ந்திருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்களை தம் பக்கம் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்களுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படியே, தென் மாவட்டத்தில் ஓபிஎஸ் அணியின் முக்கிய விக்கெட் சரிந்திருப்பதாக கூறப்படுகிறது.