ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான 3 பேரை இலங்கை அனுப்ப தமிழக அரசு கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு, முகாமில் உள்ள முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதியை விரைவாக வழங்க, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சாந்தன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு, அது தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாந்தனின் உடலை விரைவாக இலங்கைக்கு அனுப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சாந்தனின் உடல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சாந்தனின் மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கை தமிழர்களான முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் திருச்சி முகாமில் இருப்பதாகவும், தங்களை இலங்கைக்கு திரும்ப அனுப்பக்கோரி உள்துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில் மூவரையும் இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், மூவரும் தங்களுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி இலங்கை தூதரகத்தை நாடினார்களா? என்பது குறித்து தெரியவில்லை என கூறினார். இதனையடுத்து, மூன்று பேர் தொடர்பாக இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக்கூறிய நீதிபதிகள், மூவரும் தனியாக மனுத்தாக்கல் செய்தால், பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர்.