வழக்காடு மொழியாக தமிழ் விவகாரத்தில் நாங்கள் தலையிட முடியாது: உயர் நீதிமன்றம்!

உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க கோரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனத் தெரிவித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி அரசு பிளீடரிடம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பகவத் சிங் தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் வழக்கறிஞர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இன்று 7வது நாளாக உண்ணவிரத போராட்டம் தொடரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி தொடர்பாளரும், வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவை தலைவருமான கே.பாலு முறையீடு செய்தார்.

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கையில் மத்திய அரசு இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பதால், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் கே.பாலு கோரிக்கை வைத்தார். உண்ணாவிரத போராட்டத்தில் வயதான வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும், ஏற்கனவே இரண்டு வழக்கறிஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிபதிகளின் கவனத்திற்கு வழக்கறிஞர் கே.பாலு கொண்டுவந்தார்.

அவரது முறையீட்டை கேட்ட தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் கோரிக்கை குறித்து, மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும் என்றாலும், சட்ட ரீதியாக இதில் தங்களால் தலையிட முடியாது என தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தான் முடிவு எடுக்க முடியும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகரிடம் அறிவுறுத்தினர்.