கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு!

கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதுடன் அங்கு காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின் மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார், சந்தோஷ்சாமி ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். கொடநாடு வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்த நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி எஸ்பி தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவில் சிறப்பு புலனாய்வு குழு, தடவியல் நிபுணர்கள் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி இந்த ஆய்வு நடைபெறுவதாகவும், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் ஆய்வு குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கொடநாடு கொலை வழக்கில், ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட தடயங்களையும், தற்போது ஏதேனும் மாற்றம் நடந்துள்ளதா என்பதை பற்றி ஆராயவும் இந்த சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.