மதிமுக நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனை!

திமுகவுடன் உடன்படிக்கை கையெழுத்தாகாத நிலையில், இன்று மதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக குழுவினரோடு 3 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

2 மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்ட நிலையில், கடந்த முறை வழங்கியதுபோல் 1 மக்களவைத் தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியையாவது வழங்க வேண்டும் என மதிமுக கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் திமுக தரப்பிலோ ஒரு மக்களவைத் தொகுதி வழங்குவது எனவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதனால் உடன்படிக்கை கையெழுத்தாகாத நிலையில், இன்று மதிமுக நிர்வாகிகள் அவசர ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதிமுகவின் நிர்வாகக்குழு அவசரக் கூட்டம் இன்று (மார்ச் 7) காலை 10 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் அவைத்தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம் ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.