எங்களது உரிமையை நாங்கள் அதிமுகவிடம் கேட்டிருக்கிறோம்: பிரேமலதா விஜயகாந்த்!

“தமிழகத்தில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதன் அடிப்படையில், தேமுதிகவுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எங்களது உரிமையை நாங்கள் அதிமுகவிடம் கேட்டிருக்கிறோம்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டது. பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழு அதிமுக தலைமை அலுவலகம் சென்று மரியாதை நிமித்தமாக அவர்களைச் சந்தித்து வந்துள்ளனர். இது இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை. எங்களுடைய உரிமைகளைக் கேட்க வேண்டியது எங்களது கடமை. தமிழகத்தில் இருக்கும் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருக்கின்றனர். அதன் அடிப்படையில், தேமுதிகவுக்கும் ராஜ்யசபா உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எங்களது உரிமையை நாங்கள் அதிமுகவிடம் கேட்டிருக்கிறோம்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கேப்டனின் இல்லத்துக்கு வந்து இன்று இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடந்தது. வெகுவிரைவில், தேமுதிகவின் நிலைப்பாடு என்ன இறுதியான முடிவு என்ன என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்போம். எங்களுக்கான உரிமையை, ராஜ்யசபா இடத்தை வழங்க வேண்டும் என்பதை அதிமுகவிடம் வலியுறுத்தி கூறி வந்திருக்கிறோம். அவர்களும், பொறுத்திருங்கள் நிச்சயமாக நல்ல செய்தி வரும் என்று கூறியுள்ளனர்.

பாஜகவைச் சேர்ந்த அனைத்து தலைவர்களுமே, கேப்டனின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றுள்ளனர். தேர்தல் வரும்போது அனைத்துக் கட்சியினரும் அழைப்பதும், பேசுவதும் இயல்பானதுதான். பாஜகவைப் பொறுத்தவரை அழைப்பு விடுத்துக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், எங்களைப் பொறுத்தவரை, அதிமுகவினர் தேமுதிக இல்லத்துக்கு வந்ததால், மரியாதை நிமித்தமாக எங்கள் கட்சியின் நிர்வாகிகளையும் அவர்களது அலுவலகத்துக்கு அனுப்பியிருக்கிறோம். பாஜகவுடன் திரைமறைவாக பேச்சுவார்த்தை ஒன்றும் நடத்தவில்லை. விரைவில் தேமுதிகவின் நிலைப்பாட்டை, முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.