ஜாபர் சாதிக் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து கோர்ட் உத்தரவு!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி டெல்லியில் உள்ள குடோனில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி, ரூ.2,000 கோடி மதிப்புள்ள 50 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், முகேஷ், முஜிபுர், அசோக் குமார் ஆகிய தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திமுகவில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக்கை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் அதிரடியாக நீக்கப்பட்டார். ஜாபர் சாதிக் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அனைத்து விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவரது வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த மார்ச் 9ஆம் தேதி ஜாபர் சாதிக்கை போலீஸார் கைது செய்தனர். டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் புள்ளிகள் பலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கை போலீசார் ஆஜர்படுத்தினர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக ஜாபர் சாதிக்கை, காவலில் எடுத்து விசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஜாபர் சாதிக்கை நேற்று சென்னை அழைத்து வந்து என்சிபி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஜாபர் சாதிக் வைத்திருந்த 7 செல்போன்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்களின் தொடர்பு எண்கள் இருந்ததாகவும் அது குறித்து நீண்ட விசாரணை நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாபர் சாதிக்கின் போலீஸ் காவல் முடிந்த நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கிற்கு மேலும் 14 நாள்கள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.