தமிழகம் பற்றிய சர்ச்சை பேச்சால் மத்திய அமைச்சர் ஷோபா மீது 3 பிரிவில் வழக்கு!

திமுக அளித்த புகாரில் ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில் பெங்களூர் போலீசார் அவர் மீது 3 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவில் உடுப்பி – சிக்கமகளூர் எம்பியாக இருப்பவர் ஷோபா கரந்தலாஜே. இவர் பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணையமைச்சராக உள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் தொகுதி மாறி பெங்களூர் வடக்கில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியது. தமிழகம் பற்றி அவர் பேசிய கருத்து என்பது கடும் கண்டனத்துக்கு உள்ளானது. அதாவது ஷோபா கரந்தலாஜே, ‛‛தமிழகத்தில் பயிற்சி பெற்றவர்கள் கர்நாடகாவுக்கு வந்து எங்கள் ஓட்டலில் வெடிகுண்டுகளை வைக்கிறார்கள். கர்நாடகா மீது தாக்குதல் நடத்தும் அவர்கள் மீது கர்நாடகா காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் போடுவோர் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை” எனக்கூறினார்.

கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் திடீரென்று குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இதுபற்றி என்ஐஏ விசாரிக்கும் நிலையில் ஷோபா கரந்தலாஜே இப்படி கூறினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஷோபா கரந்தலாஜே மன்னிப்பு கோரி தனது கருத்தை வாபஸ் பெற்றார்.

மேலும் திமுக அமைப்பு ஆர்எஸ் பாரதி சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஷோபா கரந்தலாஜே மீது நடவடிக்கை எடுக்க இ-மெயிலில் கடிதம் அனுப்பினார். இதையடுத்து ஷோபா கரந்தலாஜே மீது தேர்தல் நடத்தை விதிக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவும், அதுபற்றி 48 மணிநேரத்தில் தகவல் அளிக்கவும் கர்நாடாக தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் தான் ஷோபா கரந்தலாஜே மீது பெங்களூர் காட்டன்பேட்டை போலீசார் வன்முறையை தூண்டுதல் உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சட்டப்பிரிவு 123(3ஏ) – மதம், இனம், சாதி, சமூகம் அல்லது மொழி அடிப்படையில் இருபிரிவினர் இடையே பகையை உருவாக்க முயற்சித்தல், சட்டப்பிரிவு 123 (3) – வேட்பாளர் மொழி, இனம், சாதி சமூகம் அடிப்படையில் வாக்கு சேகரிப்பதை தடை செய்தல் உள்ளிட்ட மொத்தம் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.