நீலகிரியில் பாஜகவினர் மீது போலீஸ் தடியடி: ரோட்டில் அமர்ந்த அண்ணாமலை!

நீலகிரி நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான எல்.முருகன், வேட்புமனுத்தாக்கல் செய்ய பேரணியாக சென்ற பாஜகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27 ஆகும். மார்ச் 28ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பதிவு செய்யப்பட்ட வாக்குகள் வரும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை திமுக சார்பில் ஆ.ராசா, அதிமுக சார்பில் முன்னாள் சபாநாகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன், பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நடைபெற்ற பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றதால் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுகவினர் சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணி செல்வதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் காவல்துறையினர் பேரணி செல்ல அனுமதி மறுத்தும், உரிய பாதுகாப்பு அளிக்காமல் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக கூறி அதிமுகவின் மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருடன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் மற்றும் அக்கட்சியினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் உதகை – கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் உதகை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி பாரளுமன்ற பாஜக வேட்பாளர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, பாஜக தொண்டர்களோடு ஊர்வலமாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த நேரத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காவல்துறை தடியடிநடத்தி கூட்டத்தை கலைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தடியடியால் காயமுற்ற பாஜக தொண்டர்களுக்கு ஆறுதல் கூறி பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தொண்டர்கள் மீது தடியடி நடத்திய உதகை எஸ்.பி.சுந்தரவடிவேல் மீது புகார் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாமலை கூறியதாவது:-

எல்.முருகன் வேட்புமனு தாக்கலுக்கு பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர். எல்.முருகனுடன் ஊர்வலமாக வந்த பாஜகவினரை உதகை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். காரணம் இன்றி பாஜக தொண்டர்கள் மீது உதகை போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். தடியடிக்கு காரணமாக உதகை எஸ்பி சுந்தரவடிவேலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.