தந்தை சமாதியில் உறுதிமொழி ஏற்ற பின் வீரப்பன் மகள் வேட்புமனு தாக்கல்!

தந்தையின் சமாதிக்கு சென்று வணங்கி உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு, நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வீரப்பன் மகள் வித்யாராணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு என்றும் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீரப்பனின் சமாதிக்கு வித்யாராணி, தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அங்கு சமாதியில் வேட்பு மனுவை வைத்து வணங்கி, உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இதன் பின்னர் கிருஷ்ணகிரிக்கு வந்த அவர், கிருஷ்ணகிரி பழையபேட்டை, 5 ரோடு ரவுண்டானா வழியாக பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகம் வந்தார். பின்னர், தனது வேட்புமனுவை கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எம்.சரயுவிடம் தாக்கல் செய்தார்.

கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வித்யாராணி (34) பி.ஏ.பி.எல் படித்துள்ளார். தற்போது கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார். மேலும், கிருஷ்ணகிரியில் மழலையர் பள்ளியின் தாளாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.