திமுகதான் பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

“நாட்டை பற்றி தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலின். கள்ளக்கூட்டணிக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர். திமுகதான் பாஜகவுடன் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நம் மீது குற்றஞ்சாட்டுகிறார் ஸ்டாலின்” என்று திருநெல்வேயில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணிக்கு ஆதரவு கேட்டு திருநெல்வேலி வாகையடிமுனையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவர் ஜான்சி ராணி. அதனால் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஜனநாயக கட்சி. சாதாரண கிளை கழக செயலராக இருந்து கட்சியில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். ஆனால் ஸ்டாலின் அப்படியா வந்தார். அவர் ஒரு பொம்மை முதல்வர். உழைப்பு என்றால் அவருக்கு என்னவென்று தெரியாது.அதிமுகவில் உழைத்தால் பதவி கிடைக்கும். அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறாது என்று ஸ்டாலின் கூறுகிறார்.

இந்த இடம் ராசியான இடம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பேசிய இடம். இறைவன் எங்களுக்கு அருளாசி அளிக்கிறான். அதிமுக நாட்டு மக்களுக்கு உழைக்கும் கட்சி. திமுக வீட்டுமக்களுக்கு உழைக்கும் கட்சி. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதிமுக ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி. அதனால்தான் ஜான்சி ராணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுகவில் வாரிசு அரசியல் இருக்கிறது. அக்கட்சியில் வாரிசுகள்தான் இப்போது அதிகளவில் போட்டி போடுகிறார்கள்.

திமுக குடும்ப ஆட்சி. அந்த கட்சி வெற்றிபெற்றால் நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. சாதாரண தொண்டனும் அதிமுகவில் பொதுசெயலராக முடியும். திமுகவில் முடியுமா?. அதிமுக மீது வழக்கு பதிவு செய்துவிட்டால் அதிமுகவை ஒழிக்க முடியுமா?. பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின். திறனற்ற முதல்வராக இருக்கிறார். நாட்டை பற்றி தெரியாத பொம்மை முதல்வர். கள்ளக்கூட்டணிக்கு சொந்தக்காரர்கள் திமுகவினர். திமுகதான் கள்ளக்கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நம் மீது குற்றஞ்சாட்டுகிறார் ஸ்டாலின். நடிப்பில் திறமையானவர்.

அமைச்சராக இருக்கும் உதயநிதி என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். சிரித்தால் பல்தான் தெரியும். பிரதமரிடம் பேசும்போது நீங்கள்தான் பல்லை காட்டியுள்ளீர்கள். யாருக்கும் நாங்கள் அடிமை இல்லை. பாஜகவுடன் பிரிந்து வந்துவிட்ட பின்னரும் அதை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார்.

3 ஆண்டுகாலம் நாட்டை குட்டிச்சுவராக்கிவிட்டார். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம். வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்திய நபரோடு ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் என்ன தொடர்பு. 2026-ல் அதிமுக ஆட்சி அமையும். அப்போது இதற்கெல்லாம் பதில் சொல்லப்படும்.

தமிழக மக்களுக்கு பாதிப்பு வரும்போது அதை எதிர்க்கும் கட்சி அதிமுக. நீட் தேர்வு என்று ஏமாற்றுவேலையில் திமுக ஈடுபடுகிறது. இப்போது எவ்வளவு நாடகம் ஆடுகிறார்கள். நீட் தேர்வு ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் சொல்ல வேண்டும். நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து படிவங்கள் குப்பை தொட்டிக்கு போய்விட்டன.

ஆளுநரை எதிர்த்து நான் ஏன் பேசவேண்டும். எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஆளுநரை சந்தித்து எங்கள் மீது ஊழல் புகாரை கொடுத்துவிட்டு சிரிக்க பேசினார் ஸ்டாலின். அப்போது இனித்தது. இப்போது கசக்கிறதா. கொள்கையை விற்கும் கட்சி திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட கட்சி திமுக. 2 ஜி வழக்கு தூசி தட்டப்பட்டுள்ளது. அதில் ஈடுபட்டவர்கள் எங்கு போவார்கள் என்பது உங்களுக்கு தெரியும். அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் சிறைக்கு செல்வார்கள்.

கடந்த 3 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை. 3.5 லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளது. கடன் வாங்கித்தான் மகளிர் உரிமை தொகையை கொடுக்கிறீர்கள். 27 மாதங்களுக்கு பின்னர்தான் கொடுக்கப்படுகிறது. அதிமுக சட்டப் பேரவையில் கொடுத்த அழுத்தம் காரணமாக கொடுக்கப்படுகிறது. இதுபோல் அதிமுகவின் அழுத்தம் காரணமாகவே திட்டங்களை கொண்டுவந்துள்ளனர். நாங்கள் கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறது.

அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் கொண்டாடுகிறார்கள். எல்லா துறைகளிலும் அதிமுக அரசு சாதனை படைத்தது. தேசிய அளவில் விருதுகளை அதிகம் பெற்றது அதிமுக ஆட்சி. அரிசி, மளிகை பொருட்கள் விலை அதிகரித்துவிட்டது. அதை கட்டுப்படுத்த தவறிய அரசாக திமுக அரசு உள்ளது. அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு அதிக திட்டங்களை கொண்டுவந்தோம். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தூத்துக்குடியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தென் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்தபோது, தூத்துக்குடி மக்களை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறினேன். எங்கு பார்த்தாலும் தண்ணீர் மற்றும் வெள்ளத்தால், கடல்போல் தூத்துக்குடி நகரம் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. மக்களை நேரில் சந்தித்து நான் ஆறுதல் கூறினேன்.

நான் தூத்துக்குடிக்கு வருகிறபோதே, என்னால் முடிந்த நிவாரணப் பொருட்களை கொண்டு வந்தேன். ஆனால் அந்த நிவாரணப் பொருட்களை இறக்கக்கூட முடியவில்லை. இடுப்பளவு தண்ணீர் சூழந்திருந்தது. அப்படியிருந்தும் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை நான் வழங்கிவிட்டுச் சென்றேன். எதற்காக சொல்கிறேன் என்றால், ஒரு அரசாங்கம் என்பது மக்கள் பாதிக்கப்படும்போது ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும். மக்களுக்கு துன்பம் ஏற்படுகிறபோது ஓடோடி வந்து உதவி செய்யும் அரசுதான் ஒரு நல்ல அரசாங்கம். இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தாரா? பதவியும், ஆட்சி அதிகாரமும் தானே அவர்களது கண்ணுக்குத் தெரிந்தது. வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாத முதல்வர் இன்றைய தமிழக முதல்வர். அவருக்கு வாக்களித்ததால் மக்களுக்கு என்ன பயன்? மக்களின் கஷ்டத்தின்போது உதவி செய்யதா ஒருவர் உங்களுக்கு தேவைதானா?

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி நகரத்துக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி கொடுத்தோம். அதில் பஹில் ஓடை 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. இருபது சதவீத பணிகள் மட்டும்தான் இருந்தது. அதைகூட திமுக இரண்டாண்டு காலமாக செய்யவே இல்லை. கமிசனுக்காக அந்த திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டனர். பஹில் ஓடை கட்டுமானத்தை முடித்திருந்தால், வெள்ளத்தின்போது தண்ணீர் தேங்காமல் வெளியேறி இருக்கும். அதை செய்யாததால், தண்ணீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிட்டது.

கிட்டத்தட்ட 10 அடி தண்ணீரில் கார்கள் எல்லாம் மிதந்ததை நான் பார்த்தேன். நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தால் பழுதடைந்தன. அதை சரிசெய்வதற்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்யவில்லை. இதனால், பொதுமக்கள் கடுமையான பாதிக்கப்பட்டனர். அந்த நேரத்தில் மின்சாரம் தடைபட்டு விட்டது. குடிநீர் கிடைக்கவில்லை. தமிழக அரசு வேகமாக செயல்பட்டு போர்க்கால அடிப்படையில் மின்சாரம் வழங்கியிருக்க வேண்டும். மிக்ஜாம் புயலின்போது பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு செயல்படாத அரசாங்கத்தைப் பார்த்தனர். இந்த அரசாங்கம் தேவைதானா, அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை நீங்கள் தேர்வு செய்வது சரியா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

முதல்வர் ஸ்டாலின் எப்போது பேசினாலும் அதிமுக கள்ளக் கூட்டணி வைத்திருப்பதாக விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு கள்ளக் கூட்டணி வைத்துக்கொள்கிற பழக்க தோஷம் இருக்கும்போலத் தெரிகிறது. இதுவரைக்கும் எந்த கட்சித் தலைவரும் இப்படி கூறியது கிடையாது. கள்ளக் கூட்டணி வைத்தது யார் என்பதை இந்த நேரத்தில் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்தான் பிரதமர் மோடியுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளனர். சிரித்தால் என்ன தெரியும்? பல்லு தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார், 2019-ல் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மதுரையில் அடிக்கல் நாட்டினார் பிரதமர். அப்போது பிரதமருடன் அமர்ந்திருந்த நான் சிரித்துக் கொண்டிருந்தேன். அதை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி, நான் பல்லைக் காட்டிக்கொண்டு இருப்பதாக கூறினார். நீங்கள் காட்டினால் சரி, நான் காட்டினால் தவறா?” என்று கூறி, உதயநிதி பிரதமருடன் சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை எடுத்துக் காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சிரிப்பது தவறா? ஸ்டாலினிடம் சிரிப்பே வராது. ஸ்டாலின் என்றாவது சிரிப்பதை பார்த்திருக்கிறீர்களா? இதுதான் கள்ளக் கூட்டணிக்கான சான்று. இது சாட்சி. அதிமுகவைப் பொறுத்தவரை மறைமுகமாக நாங்கள் யாருக்குமே ஆதரவு தரமாட்டோம். நாங்கள் நினைத்திருந்தால், பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம். எங்களுக்கு அவசியம் இல்லை. பதவிவெறி பிடித்த கட்சி அதிமுக அல்ல.மக்களுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக. இவ்வாறு அவர் பேசினார்.