தேர்தல் விதிமீறல் தொடர்பாக டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு!

தேர்தல் விதிகளை மீறியது, மக்களுக்கு இடையூறு செய்தது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிடிவி.தினகரன் மீது, காவல் ஆய்வாளர் சி.உதயகுமார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.

தேனி மாவட்ட தேர்தல் நன்னடத்தை வீடியோ கண்காணிப்புக் குழு அதிகாரி பா.நீதிநாதன், தேனி காவல் நிலையத்தில் புகார்அளித்தார். அதில், அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது,தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பாக 100 பேருடன், வரையறை செய்யப்பட்ட எல்லையை மீறிச் சென்றார்.

முன்னதாக, அன்னஞ்சி விலக்கில் இருந்து 70 கார்கள், 3 ஆட்டோக்களுடன் ஊர்வலமாக வந்தார். ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவாயில் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் அறிவுறுத்தலையும் மீறி, ஏராளமானோர் அவருடன் சென்றனர். போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தார். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், தேர்தல் விதிகளை மீறியது, மக்களுக்கு இடையூறு செய்தது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் டிடிவி.தினகரன் மீது, காவல் ஆய்வாளர் சி.உதயகுமார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார்.