அண்ணாமலை வேட்பு மனு ஏற்கப்பட்டது குறித்து தேர்தல் அலுவலர் விளக்கம்!

கோவையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அண்ணாமலையின் வேட்புமனு ஏற்புக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று பரிசீலனை செய்தனர். தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார். கோவையில் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது அண்ணாமலையின் வேட்புமனு ஏற்புக்கு தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி அண்ணாமலையின் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதையடுத்து அண்ணாமலையின் வேட்பு மனு செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க புகார் மனு கொடுத்துள்ளது. அதில், வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது Non Judicial பத்திரத்தில்தான் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் ஆணையம் அனுமதிக்காத Court Fee பத்திரத்தை பயன்படுத்தி அண்ணாமலை வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். இது அப்பட்டமான விதிமீறல். தேர்தல் ஆணையம் இதனை ஆய்வு செய்து அண்ணாமலையின் வேட்பு மனுவை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் பாடி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

கோவையில் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை எண் 17, எண் 27 என இரண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளார். எண் 17 வேட்புமனு Court Fee பத்திரத்தில் கையெழுத்து இல்லாமல் இருந்ததால் அது நிராகரிக்கப்பட்டது. மேலும் எண் 27 வேட்புமனுவானது Non Judicial பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டதால் அந்த மனு ஏற்கப்பட்டது” என்ற கூறியுள்ளார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

அரசியல் கட்சிகள் நேரடியாகக் களத்தில் எதிர்க்க முடியாமல் வழக்கமான டிராமாவை வேட்புமனுவில் கொண்டு வந்துள்ளனர். நான் இரண்டு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து இருந்தேன். ஒன்று கோர்ட் பீஸ் பேப்பரிலும் மற்றொரு வேட்புமனு Indian non judicial தாக்கல் செய்தோம். ஏனென்றால் வேட்புமனு தாக்கல் செய்யும் போது குழப்பம் இருந்தது. வழக்கறிஞர்கள் இரு வேறு விதமாகக் கூறியதாகச் சொன்னதால் குழப்பம் இருந்தது.

அதைத் தொடர்ந்தே தேர்தல் அதிகாரி ஆராய்ந்து வேட்புமனுவை ஏற்றுக் கொண்டார். இது பெரிய விஷயம் இல்லை.. ஆனால், களத்தில் எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இது அவர்களின் தோல்வி பயத்தை மட்டுமே காட்டுகிறது. இது எல்லா முறையும் நடப்பது தான். ஆனால், இந்த முறை அதை உச்சபட்சமாக எடுத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாகவே தேர்தல் அதிகாரியே தலையிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.

சீரியல் நம்பர் 15, சீரியல் நம்பர் 27 என இரண்டும் என் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்டது தான். எப்போதும் முக்கிய கட்சிகள் இரண்டு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து வைத்துக் கொள்வார்கள். இரண்டாவது வேட்புமனுவை வேட்பாளர் நேரடியாகத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எப்போது அப்லோட் செய்யப்பட்டது என்பதை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் கேட்க வேண்டும். பொய்யான தாக்கல் சொல்லி வேட்புமனுவை நிராகரிக்கச் சொல்கிறார்கள். சும்மா காரணம் சொல்லி வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இது ஒன்றும் போட்டி தேர்வு இல்லை. காரணத்தைச் சொல்லி நிராகரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது. எதாவது கையெழுத்து மிஸ் ஆனால் கூட போடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.