பாஜக ஆட்சியில் ஜாதிய, பாலின பாகுபாடு அப்பட்டமாக தெரிகிறது: கனிமொழி!

பாஜக ஆட்சியில் ஜாதிய, பாலின பாகுபாடு உள்ளது அப்பட்டமாக இந்தப் படத்தில் தெரிகிறது எனத் தெரிவித்துள்ளார் திமுக எம்.பி கனிமொழி.

முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று முன்தினம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு நேற்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.

இந்நிலையில், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி அவமதித்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. விருது வழங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், அத்வானியும், பிரதமர் மோடியும் அமர்ந்திருக்க, நின்றபடி இருக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. நாட்டின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சாதிய ரீதியாக, பாலின ரீதியாக அவமதித்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக புகைப்படத்தை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி, “பாஜக ஆட்சியில் அரசியல் சாசன தலைவரின் நிலை இதுதான். பாஜக ஆட்சியில் ஜாதிய, பாலின பாகுபாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை இந்தப் புகைப்படம் அப்பட்டமாக காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.