அதிமுக என்கிற கட்சியே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது: அண்ணாமலை

“அதிமுக என்கிற கட்சியே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. அந்த விரக்தியில் செல்லூர் ராஜு போன்ற தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த கோபத்தை என் மீது காட்டுகிறார்கள். அதுக்கு நம்ம என்ன பதில் சொல்ல முடியும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

அதிமுக – பாஜக கூட்டணி இருந்த காலக்கட்டத்தில், பாஜக எவ்வளவு அடித்தாலும் அதிமுக தாங்கிக் கொள்ளும் நிலையில் இருந்தது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தினமும் திமுகவை விமர்சிக்கிறாரோ இல்லையோ அதிமுகவை வம்புக்கு இழுக்காமல் இருக்க மாட்டார். அதிமுகவினர் தங்கள் இதய தெய்வமாக வழிபடும் ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என அசராமல் பேட்டி அளித்தார். திமுகவின் ஊழல் கணக்கை மட்டும் ஏன் வெளியிட வேண்டும்.. அதிமுகவின் ஊழல் கணக்கையும் வெளியிடுவோம் என்று கூறி ரத்தத்தின் ரத்தங்களை கொதிக்க வைத்தார். இப்படி அடிக்கு மேல் அடி விழுந்ததன் காரணமாக, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. கூட்டணி முறிந்ததுமே அதிமுக தலைவர்கள் சிலர் தாங்கள் அடக்கி வைத்திருந்த கோபத்தை அண்ணாமலை மீது கொப்பளித்தனர். அதில் முக்கியமானவர் செல்லூர் ராஜு. பொது மேடைகளில் அண்ணாமலையை ஒருமையில் பேசுவதும், ‘டா’ போட்டு பேசுவதுமாக ருத்ர தாண்டவம் ஆடினார் செல்லூர் ராஜு.

அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செல்லூர் ராஜு பேசும் போது, “அண்ணா மட்டும் கட்சி தொடங்காமல் இருந்தால் இன்னைக்கு குப்பனும் சுப்பனும் அமைச்சர் ஆகியிருக்க முடியுமா? சாதாரண ஆட்கள் கவுன்சிலராகவும், மேயராகவும் ஆகியிருக்க முடியுமா? அப்படிப்பட்ட சாதனையை புரிந்தவர்டா அண்ணா. ஏன்டா டேய்.. அவரை பற்றி இழிவா பேசுறியடா டேய். உன் நாக்கு அழுகிப் போகும்டா” என அண்ணாமலையை குறிப்பிட்டு பேசினார்.

அதேபோல, தொடர்ச்சியாக அண்ணாமலையை அரசியல் கத்துக்குட்டி என்றும், கட்சித் தலைவராக இருக்க லாயக்கற்றவர் எனவும் செல்லூர் ராஜு கூறி வருகிறார். மேலும், இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும் போது, “பாஜகவை பற்றி பேசினால் அமலாக்கத்துறை வந்துவிடும் என்கிறார்கள். வெள்ளைக்காரன் ஜெயிலை கட்டி வச்சதே எங்கள் சமூகத்துக்காக தான். மதுரையில் அழகிரியை எதிர்த்தே அரசியல் செய்தவன் நான். இந்த சிபிஐ, அமலாக்கத்துறை எல்லாம் ஜுஜுபி” எனப் பேசினார்.

இந்நிலையில், செல்லூர் ராஜு இவ்வாறு பேசி வருவது குறித்து அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “செல்லூர் ராஜு வாயில் இருந்து கெட்ட வார்த்தை வருவது நார்மல் தானே. அவரது வாயில் இருந்து நல்ல வார்த்தை வந்தால் சொல்லுங்கள். அன்றைக்கு மழை பெய்யும். அதிமுக இன்னைக்கு காணாமல் போய்ட்டு இருக்கு. அந்தக் கட்சியில் இருந்து எல்லோரும் வெளியே வர ஆரம்பித்து விட்டார்கள். பாவம்.. அந்த விரக்தியை என் மேல சிலர் காட்டுறாங்க. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?” என அண்ணாமலை கூறினார்.