விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

“நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், புகழேந்தி நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.” என்று விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று (சனிக்கிழமை) காலை 10.35 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது. கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

1973-இல் திமுகவின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய புகழேந்தி, அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார். 1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த புகழேந்தியை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர். எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். திமுக துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடிக்கு உற்ற துணையாக விளங்கி, மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தி மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, திமுகவுக்கு பேரிழப்பாகும்.

ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் திமுக தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: “விழுப்புரம் தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான என்.புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமான செய்தி அறிந்து மிகுந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். அவர் எங்களுடன் சட்டப்பேரவை கூட்டங்களில் கலந்து கொண்டதையும், அவருடன் பழகிய காலங்களை எண்ணி பார்க்கிறேன். அவரது பேச்சுகளும், மக்கள் சேவைகளும் இன்றும் எனது நினைவில் நீங்கா இடம் பெற்று நிற்கின்றன. என்.புகழேந்தியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்ற கழக தலைவர் மற்றும் திமு.க. நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் வேதனையோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: “விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நா. புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். இளம் வயதிலிருந்தே திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகிக்கும் அளவுக்கு உயர்ந்த புகழேந்தி, அனைவரிடத்திலும் நன்றாக பழகக்கூடியவர். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி நலம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது. நா.புகழேந்தியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், விழுப்புரம் மாவட்ட திமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

திருநாவுக்கரசர்: ”விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெருந் துயரத்திற்குரியது. இவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். புகழேந்தி விக்கிரவாண்டி தொகுதி மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி வந்தவர். சிறந்த பண்பாளர். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது தந்தையை இழந்து வாடும் அவரது மகன் புகழ் செல்வக்குமாருக்கும், அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மக்களுக்கும், தி,மு.க தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி நேற்று இரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.புகழேந்தியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என வைகோ தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.