மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் 18-ம் தேதி வரை நீட்டிப்பு!

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 18-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சிபிஐ கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது. இதில் மதுபான விற்பனையாளர்களுக்கு உரிம கட்டணத்தில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனடைந்த மது விற்பனையாளர்கள் அதிகாரிகள் பலருக்கு லஞ்சம் வழங்கியுள்ளனர் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளன.

இந்த வழக்கில் ஆம் ஆத்மி மூத்ததலைவர் சஞ்சய் சிங் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. அவர் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை வரும் 18-ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.