திமுக ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது: அண்ணாமலை

“திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவு போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரையில் பைக் ஓட்டி ஒருவரை கஞ்சா போதையில் வந்த நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “திமுக ஆட்சியில் தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவு போதைப்பொருள் எளிதாக கிடைக்கிறது. கஞ்சா விற்கும் வியாபாரிகளுக்கு திமுகவில் பதவிகள் வழங்கப்படுகின்றன. இது சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்குகிறது.

கஞ்சா போதையில் மதுரையில் அப்பாவி பைக் ஓட்டி ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் தமிழகத்தில் நடந்த 4-வது சம்பவம் இது. முதல்வர் ஸ்டாலின் எப்போது விழித்துக்கொள்வார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.