அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் குறித்து முன்னரே பேசியிருக்க வேண்டாமா?: செல்லூர் ராஜு

போனில் ரகசியமாக பேசியதை டேப் செய்து வெளியிடும் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் குறித்து முன்னரே பேசியிருக்க வேண்டாமா? என கோவையில் 1 லட்சம் பாஜக வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்த கருத்திற்கு செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலின் போது பல இடங்களில் பாஜகவினர் பிரச்சினை செய்ததை பார்க்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் வாக்குப்பதிவு நடைபெற்ற போது நிறைய பேர் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது என புகார் கூறினர். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் எனவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் லட்சக்கணக்கில் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார் கூறினர்.

இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தின் வாசலில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ளும் வகையில், நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

52ஆண்டுகளாக மக்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் கட்சி அதிமுக. தமிழகத்திற்கு யார் நல்லது செய்தாலும் வரவேற்போம். அது ராகுலா இருந்தாலும் சரி. வாக்காளர்கள் பல பேர் பட்டியலில் இருந்து உண்மையிலேயே விடுபட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு என்று சொல்வதா என்ன சொல்வது எனத்தெரியவில்லை.. எல்லா மாவட்டங்களிலும் அப்படித்தான் உள்ளது. கட்சியினர் பூத் சிலிப் வழங்க தேர்தல் ஆணையம் தடை செய்தது. அரசு அலுவலர்கள் பணியாளர்களை கொண்டு இப்பணியை செய்தார்கள். அப்போது பூத் சிலிப்பை அரசு ஊழியர்களாக இருந்தவர்கள் கொடுத்தார்கள். இப்போது திமுக ஆட்சியில் ஒப்பந்த பணியாளர்கள் அதிகம் இருந்ததால் அதிகம் கவனம் செலுத்தவில்லை. தேர்தல் ஆணையம் கட்சியினர் பூத் சிலிப் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பூத் சிலிப் குறித்தும், வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்தும் அதிபுத்திசாலி ஐபிஎஸ் படித்தவர் தற்போது பேசுகிறார். ஏன் முன்னரே பேசவில்லை. குறிப்பாக பாஜக வாக்காளர்கள் தூக்கப்பட்டு விட்டனர் என சொன்னால் இதை ஏன் முன்பே ஆணையத்திடம் கூறவில்லை. தேர்தலில் தனக்கு சரியான வாக்குப்பதிவு இல்லை. தன்னை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதால் இதுபோன்று பேசுகிறார். இதையெல்லாம் ஏற்கனவே கொடுத்து இருக்கனும். ஒருவர் போனில் பேசியதை டேப் செய்து வெளியிடக்கூடிய திறமை படைத்த அண்ணாமலை, ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை வாக்காளர் பட்டியலில் பாஜக வாக்காளர்கள் விட்டுப் போயுள்ளனர் என முன்பே சொல்லியிருக்க வேண்டாமா? கேரளா கர்நாடகத்திற்கு போகிறார். ஒரு மதத்தை குறி வைத்து பேசுவது உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் பேசுவது சரியல்ல. தமிழகத்தில் எல்லோரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. இவ்வாறு அவர் கூறினார்.