பாஜக எம்பி பிரிஜ் பூஷன் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலியல் வழக்கில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த காலத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. நாட்டின் கொடியை சர்வதேச அரங்கில் உயர்த்த வீராங்கனைகள் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வியெழுப்பினர். இந்த போராட்டத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மேரி கோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள், வீரர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து புகார்களை அளித்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்பட்டது. ஆனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு 3 மாதங்கள் கடந்த பின்னரும் கூட, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

நிலைமையை சமாளிக்க இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு தொடர்புடைய யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த போட்டியிலிருந்தே விலகுவதாக வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. இவ்வளவு பஞ்சாயத்துக்கு நடுவில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி கட்ட விசாரணை ஏப்.18ம் தேதி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பிரியங்கா ராஜ்புத் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பிரிஜ் பூஷணுக்காக ஆஜராகியிருந்த வழக்கறிஞர், “பாலியல் வன்கொடுமை வழக்கை மேலும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கையை வைத்தார். இதனையடுத்து இந்த வழக்கின் உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று இந்த வழக்கு குறித்து உத்தரவு வெளியாகியுள்ளது. அதில் பிரிஜ் பூஷண் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை என்றும், பூஷண் மீதான பாலியல் வழக்கில் மே 7ம் தேதி குற்றச்சாட்டுகு்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பாஜக எம்பிக்கு எதிராக நீதிமன்றம் இப்படியொரு உத்தரவை பிறப்பித்திருப்பது, அக்கட்சியினரிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.