தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றியவர்களை திமுக மிரட்டுது: தமிழிசை!

தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றியவர்களை திமுக அச்சுறுத்துவதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு கடந்த 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. எனினும், பதிவான வாக்குகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் குழப்பத்தை ஏற்படுத்தின. அதே சமயம் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கும் நபர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியது. கோவை, மத்திய சென்னை தொகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையமும் உரிய விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம் பாஜக தலைவர்கள் திமுக மீது தேர்தல் தொடர்பாக தொடர்ந்து விமர்சனம் முன்வைத்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை, “திமுகவுக்கு தேர்தல் தோல்வி பயம் வந்துவிட்டது. அதற்காக அரசு அதிகாரிகளை வைத்து பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றும் நபர்களை மிரட்டி வருகிறது. பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றிய கவுதம் என்பவரின் வீட்டில் மெட்ரோ அதிகாரிகள் சம்ப் இருப்பதாகக் கூறி அதனை துண்டிக்க வந்திருப்பதாகக் கூறியுள்ளனர். பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாலே அவர்கள் உயர் ஜாதியினர் என்று நினைத்துக்கொள்கிறார்கள். தம்பி கவுதம் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

தண்ணீர், மின்சாரம், சாக்கடை வடிகால் வசதிகளை செய்துகொடுப்பது அரசின் கடமை. ஆனால், ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மின்சாரம், தண்ணீரை எல்லாம் துண்டிப்பார்களா என்ன? தமிழகத்தை ஆளுகிறீர்கள் என்பதற்காக உங்களின் எந்தவிதமான அச்சுறுத்தலுக்கும் நாங்கள் பணிந்துவிடுவோம் என்பது கிடையாது” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து, “தேர்தலை நேர்மையாக நடத்தாமல் அச்சுறுத்தும் தேர்தலாக நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதற்கு இதுதான் ஒரு உதாரணம். பாஜகவை அசைத்துப் பார்த்து திமுக வெற்றிபெற முடியாது. அதற்கான காலமும் மலையேறிவிட்டது. நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் என எச்சரிக்கிறேன். இனியும் இதுபோல தொடர்ந்தால் நாங்கள் பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம். பாஜக வளர்ந்துவருவதைக் கண்டு திமுகவுக்கு பயமாக இருக்கிறது. அதனால் பாஜகவுக்கு ஆதரவாக யார் வேலை செய்தாலும் இவ்வாறு அச்சுறுத்துகிறார்கள். ” என்று கூறினார்.

மேலும், “விடுபட்ட வாக்காளர்கள் விவரங்களை ஒவ்வொரு பூத் வாரியாக ஆய்வு செய்து வருகிறோம். நிறைய வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளது. ஆனால், முதல்வரும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வாய் திறக்காமல் இருக்கிறார்கள். ஆக, அதற்கு முழு காரணமும் அவர்கள் தான் என்பதை சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்” என்றும் குற்றம்சாட்டினார்.