மணல் கொள்ளை வழக்கு: நீர்வளம், கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு!

மணல் கொள்ளை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறை முன்பு நேற்று முன்தினம் ஆஜரான திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்களிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், மணல் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரணை விரிவடைந்துள்ளது. நீர்வளம், கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட, கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் தமிழகத்தில் 34 இடங்களில் சோதனை நடத்தினார்கள். கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி ஒரே நேரத்தில், 34 இடங்களில் 2 நாட்களுக்கு மேலாக இந்த சோதனை நடந்தது. இதில், மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சில மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதன்படி, நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகினர். எனினும், அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து 5 மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத் துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தோடு, அமலாக்கத்துறை சம்மனுக்கு 5 மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, நேற்று முன் தினம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராகினர்.

திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் ஆவணங்களுடன் ஆஜாரகினர். எனினும் அங்கு வைத்து அவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்காமல், வேறு ஒரு இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியது. அப்போது 5 மாவட்ட ஆட்சியர்களுடனும் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்ற அதிகாரிகள் அதை வைத்து தற்போது அடுத்தக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். விசாரணையின் போது 3 மாவட்ட ஆட்சியர்கள் இந்த முறைகேடு நடந்த காலக்கட்டத்தில் நாங்கள் ஆட்சியராக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதேபோல் மணல் அள்ளுவதில் தங்களுக்கு குறைந்த பணியே உள்ளது என்றும் நீர்வளத்துறை, கனிமவளத்துறைக்கே இதில் அதிக பணி இருப்பதாக மாவட்ட ஆட்சியர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்ததாக நீர்வளத்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பு முடிவு செய்துள்ளனர். 5 மாவட்ட ஆட்சியர்களுடனும் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு, மணல் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரணை மேலும் விரிவடைந்துள்ளது. நீர்வளம், கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.