திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை; சமூக நீதியும் இல்லை: வானதி சீனிவாசன்!

“திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை, சமூக நீதியும் இல்லை” என கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், சங்கம் விடுதி கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை. சமூக நீதியும் இல்லை.

கடந்த 2023-ம் ஆண்டு நவம்பரில் காஞ்சிபுரம் மாவட்டம், சிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக எழுந்த புகார், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து முழுமையாக ஆய்வு நடத்துவதற்குள், அவசர அவசரமாக ஜேசிபி இயந்திரம் மூலம் குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்படவில்லை என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார்.

கடந்த மார்ச் மாதம், மகளிர் நலத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதக்கமும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள சங்கம் விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட குருவாண்டான் தெருவில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தற்போது மாட்டுச் சாணம் கலக்கப்படவில்லை என புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. சில மாதங்களில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசு சார்பில் பதக்கமும், பாராட்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்து 15 மாதங்களை கடந்துவிட்டது. இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முடியாத திமுக அரசு, நடக்கும் சம்பவங்களை மூடி மறைத்து வருகிறது. எதற்கெடுத்தாலும் சமத்துவம், சமூக நீதி என்று தான் திமுக அரசு பேசுகிறது. ஆனால், உண்மையிலேயே திமுக ஆட்சியில் சமத்துவமும் இல்லை. சமூக நீதியும் இல்லை. குடும்ப ஆட்சியும், ஊழலும் இருக்கும் இடத்தில் சமத்துவமும் இருக்காது. சமூக நீதியும் இருக்க முடியாது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை விமர்சிப்பவர்களை கைது செய்வதற்கும், எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்கும் மட்டுமே தமிழக காவல்துறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் சங்கம் விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.