நீர் மோர் வழங்கி தாகம் தீர்க்கும் உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி வழங்க வேண்டும்: அண்ணாமலை

கோடை வெயில் தாக்கம் போக்க, தாகம் தீர்க்கும் நற்பணியை தமிழகம் முழுவதும் பாஜக உறுப்பினர்கள் பரவலாக மேற்கொள்ள வேண்டுகிறேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோடை வெப்பத்தைத் தணிக்க, பல பகுதிகளில் பாஜகவினர் நீர்மோர் பந்தல் அமைத்து, மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். சென்னையில் பாஜக தலைமை அலுவலத்திலும், இன்னும் பல மாவட்ட அலுவலகங்களிலும் தினமும் நீர் மோர் வழங்கப்படுகிறது.

கொரோனா காலத்தில் நாம் செய்த மக்கள் சேவையைப் போல, இந்தக் கோடை வெயில் தாக்கம் போக்க, தாகம் தீர்க்கும் இந்த நற்பணியை தமிழகம் முழுவதும் பாஜக உறுப்பினர்கள் பரவலாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.

அனைவரும் தங்கள் பகுதிகளில் சாலை ஓரங்களில் நிழற்குடைகள் அமைத்தும், தண்ணீர் பந்தல்கள் அமைத்தும், நீர் மோர் வழங்கியும் தாகம் தீர்க்கும் உதவிகளை மக்களுக்கு தொய்வின்றி வழங்க வேண்டும். மக்களைக் காக்கும், இந்த சமூகப் பணியை ஒவ்வொரு பூத்திலும், மண்டலத்திலும், சக்தி கேந்திரத்திலும், மாவட்ட அளவிலும் மற்றும் மாநில அளவிலும் உள்ள அனைத்து தலைவர்களும், நிர்வாகிகளும், அமைப்பாளர்களும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.