கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை!

கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மே 6 ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, கோடை விடுமுறை அறிவித்த நிலையில், அரசின் உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, இது குறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் இன்று சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.