அறப்போராட்டத்தை அடக்குமுறைகள் மூலம் முடக்க நினைப்பதா?: சீமான்!

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக போலீசார் தடை விதித்துள்ளனர். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என கடந்த சட்டதமன்றத் தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத்துக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சர்வதேச மையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் வள்ளலார் பெருவெளியில் அரசு சார்பில் கட்டப்படும் இந்த ஆய்வு மையத்திற்கு கிராம மக்கள், சன்மார்க்க சங்கத்தினர், பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று வடலூரில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாம் தமிழர் கட்சியினரின் போராட்டத்திற்கு காவல் துறையினர் தடை விதித்தனர். இதற்கு சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வடலூர் வள்ளலார் பெருவெளியைக் காக்க நடக்கும் அறப்போராட்டத்தை அடக்குமுறைகள் மூலம் முடக்க நினைப்பதா?. வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாகத் தொடங்கப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் தெய்வத்தமிழ்ப்பேரவை இணைந்து இன்று (04-05-2024) வடலூரில் நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுமைக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களையும் கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து, அடக்குமுறையை ஏவும் இத்தகைய நிர்வாகச்செயல்பாடு மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான மாபெரும் கொடுமை.

மேலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தெய்வத்தமிழ்ப் பேரவையினரையும் கைதுசெய்திருப்பதால், நீதிமன்றத்தை நாடி உரிய அனுமதியைப் பெற்று, ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய அளவில் பேரேழுச்சியாக மீண்டும் நடத்தப்படுமெனவும், வடலூரில் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டுமானம் அறப்போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படுமெனவும் பேரறிவிப்பு செய்கிறோம் என்றும் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.