காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகாருக்கே இந்த நிலைமையா?: அண்ணாமலை கண்டனம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கடந்த 30 ஆம் தேதியே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்திருந்த நிலையில், அவரது புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங். காங்கிரஸ் கட்சியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருந்த ஜெயக்குமார் தனசிங், மாவட்ட தலைவராக 7 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து இருக்கிறார். திசையன்விளை சுற்று வட்டார பகுதியில் பிரபலமான தொழில் அதிபராகவும் அறியப்படுகிறார். இந்த நிலையில், கடந்த 30 ஆம் தேதி அன்று, ஜெயக்குமார் தனசிங், தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், முன் விரோதம் காரணமாக தன்னை கொலை செய்ய பலர் நோட்டமிடுவதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்து இருக்கிறார். அந்த கடிதத்தை நெல்லை மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுக்க ஜெயக்குமார் திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் ஜெயக்குமார் தனசிங்கை காணவில்லை என அவரது மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் உவரி அருகே கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மர்மமான முறையில் ஜெயக்குமார் தனசிங் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மரணம் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பே மரண வாக்குமூலம் என குறிப்பிட்டு நாங்குநேரி MLA மற்றும் கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் ஆகியோர் பெயரை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதால் ஜெயக்குமார் தனசிங் மரணம் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை என்றால் அரசியல் காரணமாக அல்லது தொழில் போட்டியா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் அளித்த புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரு.ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது. உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.