காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அனைவரும் மோசடிக்காரர்கள்: அமித்ஷா

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அனைவரும் மோசடிக்காரர்கள் என அமித்ஷா விமர்சித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 17 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 13-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈருபட்டு வருகின்றனர். அந்த வகையில், தெலுங்கானா மாநிலம் செகந்தபராபாத்தில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியா கூட்டணி பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அனைவரும் மோசடிக்காரர்கள். மறுபுறம் பிரதமர் மோடி மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. ராகுல் காந்தி செல்வச் செழிப்புடன் பிறந்தவர். பிரதமர் மோடி ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். இந்தியா கூட்டணியில் நம்பகத்தன்மை வாய்ந்த பிரதமர் வேட்பாளர் யாராவது இருக்கிறார்களா? பிரதமர் பதவியை சுழற்சி முறையில் வழங்குவதற்கு அவர்கள் திட்டமிடுகின்றனர்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ஒழித்து விடுவார் என காங்கிரஸ் கூறுகிறது. ஆனால் பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் சட்டப்பிரிவு 370 ரத்து, முத்தலாக் ஒழிப்பு, பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை மற்றும் ராமர் கோவில் கட்டுமானம் உள்ளிட்ட விவகாரங்களுக்காகவே தனது பெரும்பான்மையை பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு அமித்ஷா கூறினார்.