காங்கிரஸ் கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா!

தென் இந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போல இருப்பதாக சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்துள்ளார்.
இனவெறி கருத்து சர்ச்சைக்கு மத்தியில் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா ராஜினாமா செய்தார்

இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சாம் பிட்ரோடா விலக முடிவு செய்துள்ளதாகவும், அந்த முடிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஏற்றுக் கொண்டதாகவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்து உள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது குறித்த அவரது இனவெறிக் கருத்து, நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு இடையே பெரும் அரசியல் சர்ச்சையை உருவாக்கியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இப்போது அமெரிக்காவில் இருக்கும் சாம் பிட்ரோடா, ராஜீவ் பிரதமராக இருந்தபோது ராஜீவ் காந்தியின் ஆலோசகராக இருந்தார். 2004 தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்ற பிறகு, சாம் பிட்ரோடாவை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் இந்திய தேசிய அறிவு ஆணையத்தின் தலைவராக நியமித்தார். 2009 ஆம் ஆண்டில், பொது தகவல் உள்கட்டமைப்பு தொடர்பான மன்மோகன் சிங்கின் ஆலோசகராகவும் பிட்ரோடா இருந்தார்.

ஓவர்சிஸ் காங்கிரஸ் அமைப்பின் தலைவராக உள்ள சாம் பிட்ரோடா இந்த மாத தொடக்கத்தில் தி ஸ்டேட்ஸ்மேன் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், வெவ்வேறு தோல் நிறங்கள் மற்றும் தோற்றம் கொண்ட மக்கள் இந்தியாவில் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்று கூறினார்.

“அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சண்டைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மிகவும் மகிழ்ச்சியான சூழலில் நாங்கள் 70 முதல் 75 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்கள் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்கள் போலவும் தோற்றமளிக்கும் இந்தியாவைப் போலவே பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாம் ஒன்றாக வைத்திருக்க முடியும். அது ஒரு விஷயமே இல்லை. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள்” என சாம் பிட்ராடா கூறி இருந்தார்.