நீ மீசை வச்ச ஆம்பள தானே.. பொம்பளைங்கள ஏன் தப்பா பேசுற: வீரலட்சுமி!

“நீ ஒரு மீசை வெச்ச ஆம்பள தானே.. அப்படியென்றால் ஒரு ஆம்பளை கூட நேரடியாக மோது. ஆம்பள டூ ஆம்பள தான் மோதனும். எதுக்கு இடையில் பெண்களை பற்றி கேவலமாக பேசுற?” என்று சவுக்கு சங்கரை பார்த்து தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி கேள்வியெழுப்பியுள்ளார்.

“பெண்களிடம் தவறாக நடந்ததால் வேலை இழந்த நீ, மற்ற பெண்களை பற்றி தவறாக பேசுகிறாயா?” என்று பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை பார்த்து தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், அவர் மீதும், ரெட் பிக்ஸ் யூடியூப் உரிமையாளர் ஃபெலிக்ஸ் மீதும் அவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக காவல்துறை ஏடிஜிபி அருண் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தரக்குறைவாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவை சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸார், தேனியில் பதுங்கி இருந்த அவரை சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர் மீது கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லாமல் பெண் போலீஸார் பற்றியும், ஏடிஜிபி அருண் பற்றியும் தவறாக பேசிய சவுக்கு சங்கர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், அவனது பேட்டியை வெளியிட்ட ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் ஃபெலிக்ஸை கைது செய்யக் கோரியும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நாங்கள் புகார் அளித்துள்ளோம். எங்கள் புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார் இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக பெண்கள் முன்னேற முடியாமல், தங்கள் கனவுகளை கனவாகவே மாற்றி வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர். இப்பொழுதுதான் பெண்கள் எல்லா துறைகளுக்கு வர தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், இப்போது மீண்டும் பெண் சமூகத்தை கேவலமாக சிலர் பேசி வருகிறார்கள். நான் சவுக்கு சங்கரை பார்த்து கேட்கிறேன். நீயும் ஒரு தாய் வயித்துல தானே பொறந்திருப்ப? நீயும் ஒரு பெண்ணின் கருவில் இருந்து தானே வந்திருப்ப? உன் வீட்டிலேயும் அக்கா தங்கச்சி இருப்பாங்கல. அதை யோசிச்சு பார்க்காமல் மற்ற பெண்களை பற்றி நீ பேசிருக்க.

சவுக்கு சங்கர் முதலில் லஞ்ச ஒழிப்புத் துறையில் தானே வேலை பார்த்தாரு. அவரை ஏன் வேலையில் இருந்து தூக்குனாங்கனு தெரியுமா? ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியதன் காரணமாக தான் சவுக்கு சங்கர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மற்றபடி அவர் ஒன்றும் தியாகம் பண்ணிட்டோ, லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த லஞ்சத்தை எல்லாம் ஒழிச்சிட்டோ வரல. பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் தான் சவுக்கு சங்கர்.

அப்படிப்பட்ட நீ இப்போது சமூக ஆர்வலர் என்கிற பெயரிலும், பத்திரிகையாளர் என்கிற பெயரிலும் ஒரு யூடியூபை ஆரம்பிச்சிட்டு, அதில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிட்டு இருக்க. பெண் போலீஸார் பற்றி தவறாக பேசிய சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால், சவுக்கு சங்கர் கூறியதை தனது யூடியூபில் வெளியிட்ட ரெட் பிக்ஸ் யூடியூப் உரிமையாளர் ஃபெலிக்ஸை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? எனவே ஃபெலிக்ஸையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். ஒரு அரசாங்கத்தை விமர்சிக்கணும்னா நேரடியாக பேசு. ஒரு ஆம்பளைய பற்றி பேசு. நீ மீசை வெச்ச ஆம்பள தானே.. ஆம்பள டூ ஆம்பள பேசு. ஆம்பள டூ ஆம்பள தான் மோதணும். எதுக்கு இடையில் பெண்களை பற்றி நீ பேசுற? இவ்வாறு வீரலட்சுமி கூறினார்.