பாஜக முன்னாள் எம்.எல்.ஏ வேலாயுதம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!

பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதம் மறைவையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், ஏன் தென்னிந்தியாவிலேயே பாஜகவுக்கு முதல் எம்.எல்.ஏவை வழங்கிய தொகுதி பத்மநாபபுரம். 1996ம் ஆண்டு பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சி.வேலாயுதம். பத்மநாபபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவும், தென்னிந்தியாவில் பாஜகவின் முதல் எம்.எல்.ஏவுமான வேலாயுதம் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும், கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர்; பழகுதற்கினிய உள்ளம் கொண்டவர் அவர். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.