கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது இண்டியா கூட்டணியை பலப்படுத்தியுள்ளது: மு.க.ஸ்டாலின்!

“அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை அளித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறேன். கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இண்டியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை அளித்துள்ள உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை வரவேற்கிறேன். அநீதிக்கு எதிரான இந்த வெற்றி நமது மக்களாட்சியை வலிமைப்படுத்தியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையிலிருந்து வெளிவருவது நீதியை அடையாளப்படுத்துவதோடு இண்டியா கூட்டணியையும் பலப்படுத்தியுள்ளது. தேர்தலில் இண்டியா கூட்டணி பெரும் வெற்றி பெறும் வேகத்தை இது கூட்டியுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ள அதே வேளையில் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதன்படி அவர் ஜூன் 2-ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.