வைகோ விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்: சசிகலா!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன் எனவும் அவர் விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும் ஆண்டவனை வேண்டுகிறேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சசிகலா கூறியுள்ளதாவது:-

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கால் இடறி கீழே விழுந்ததில் அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தற்போது திரு.வைகோ அவர்களுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் மண்ணின் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவராக விளங்கும் வைகோ தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து போராடி வருபவர். அன்புச்சகோதரர் வைகோ விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும், அதே உத்வேகத்துடன் மீண்டும் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.