பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம்: திண்டுக்கல்லில் காங்கிரஸார் கைது!

கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக தமிழகம் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரி வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் மணிகண்டன் தலைமையில் மாநகராட்சி மண்டல தலைவர் கார்த்திக் உள்ளிட்டோர் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து கருப்புக் கொடியுடன் புறப்பட்டனர்.

அப்போது அங்கு வந்த போலீஸார், அவர்களை போராட்டம் நடத்தவிடாமல் தடுத்து கைது செய்தனர். அப்போது பிரதமருக்கு எதிராக காங்கிரஸார் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 27 பேர் கைது செய்யப்பட்டனர்.