இண்டியா வெற்றிபெறப் போகிறது: ராகுல் காந்தி உறுதி!

நாளை இறுதிகட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

நாடு முழுவதும் இறுதி மற்றும் 7-ம் கட்டமாக 57 தொகுதிகளில் நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று ஓய்ந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று நாட்டின் மகத்தான மனிதர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நேரத்தில், இண்டியா கூட்டணி அரசு அமையப் போகிறது என்பதை காங்கிரஸின் சிங்கம் போன்ற துணிச்சல் கொண்ட தொண்டர்களுக்கு நான் நம்பிக்கையுடன் கூற விரும்புகிறேன். நாட்டின் அரசியலமைப்பு மற்றும் கல்வி நிறுவனங்களை காக்க தலைவணங்காமல் நின்ற கூட்டணியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நான் இதயபூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் தொடர்ந்து திசைதிருப்ப பல்வேறு முயற்சி செய்தாலும், பொதுமக்களின் உண்மையான பிரச்சினைகளில் நாம் போராடி வெற்றி பெற்றோம். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்தோம்.

சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கையையும் மாற்றும் புரட்சிகரமான உத்தரவாதங்களை நாம் ஒன்றிணைந்து முன்வைத்தோம், மேலும் நமது செய்தியை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டு சேர்த்தோம். கடைசி தருணம் வரை வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் ஸ்டிராங் ரூம்களை கண்காணிக்குமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இண்டியா வெற்றிபெறப் போகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.