அரசியல் சாணக்கியர் அமித் ஷா கையேந்தி நிற்கிறார்: ஜெய்ராம் ரமேஷ்!

“அரசியல் சாணக்கியர் அமித் ஷா கையேந்தி நிற்கிறார்” என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், “அரசியல் சாணக்கியர் என்று சொல்லிக் கொண்ட அமித் ஷா, கடைசியில் தான் விரித்த வலையிலேயே மிகவும் மோசமாக மாட்டிக்கொண்டார். ஒவ்வொரு அடியிலும் பொதுமக்களை முட்டாளாக்கி, மிகப்பெரிய முதலாளிகளுக்கு சவால் விடும் ராஜாக்களின் ராஜா, இன்று கிண்ணத்துடன் கையேந்தி பல கதவுகளைத் தட்டி, எம்.பி.,க்களை நன்கொடையாகத் தேடிக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272-தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது.

மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனை தொடர்ந்தே இவர்களின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையை விமர்சிக்கும் வகையில் தான் அமித் ஷாவை விமர்சித்து இவ்வாறாகப் பதிவிட்டுள்ளார் ஜெய்ராம் ரமேஷ்.