முன்னாள் ஆளுநர் தமிழிசையுடன் அண்ணாமலை சந்திப்பு!

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அவரது இல்லத்துக்குச் சென்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசையை அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசையின் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது’’ என்று பதிவிட்டார்.

அண்ணாமலை பதிவை டேக் செய்து ‘‘தமிழக பாஜக மாநிலத் தலைவர் அன்புத்தம்பி அண்ணாமலையைச் சந்தித்ததில் மகிழ்ச்சி..’’ என்று தமிழிசை பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, தன்னை சந்திக்க வந்த அண்ணாமலைக்கு தான் எழுதிய ‘VOICE FOR ALL’ புத்தகத்தை பரிசாக வழங்கினார் தமிழிசை. மக்களவை தேர்தல் தோல்வி குறித்து எழுந்த மோதலுக்கு மத்தியில் இருவரது சந்திப்பும் தமிழக பாஜகவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.