திருச்சி சூர்யா பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்!

பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் திருச்சி எஸ் சூர்யா அதிரடி நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் பாஜகவின் சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓராண்டு நீக்கப்பட்டுள்ளார்.

திமுக மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா. இவர் தொடக்கத்தில் திமுகவில் செயல்பட்டு வந்தார். அதன்பிறகு பாஜகவில் இணைந்தார். தற்போது பாஜகவில் மாநில தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக உள்ளார். இவர் பேசும் பேச்சுக்கள் அடிக்கடி சர்ச்சையை கிளப்பும். தற்போது பாஜகவில் இதர இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக திருச்சி சூர்யா பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் தான் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து திருச்சி எஸ் சூர்யா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில தலைவர் சாய் சுரேஷ் குமரேசன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளர் திருச்சி எஸ் சூர்யா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் இடையே மோதல் இருந்ததாக சமீபத்தில் கூறப்பட்டது. இதுதொடர்பாக திருச்சி சூர்யா பல யூடியூப் சேனல்களில் பேட்டியளித்தார். இந்த பேட்டியின்போது அவர் தமிழிசை சவுந்தரராஜனை கடுமையாக விமர்சனம் செய்தார். இத்தகைய சூழலில் தான் அவரிடம் இருந்து அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் பாஜகவில் இன்னொரு நிர்வாகி கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ஓராண்டுக்கு நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாஜகவின் மாநில அலுவலக செயலாளர் சந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சிந்தனையாளர் பிரிவின் மாநில பார்வையாளர் கல்யாணராமன் நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மாநில தலைமையினை பற்றியும், கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் தகுந்த ஆதாரங்கள் இன்றி சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகிறார். இது கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின்படி கல்யாணராமன் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் 1 வருடத்திற்கு நீக்கப்படுகிறார். ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றுமு் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.