ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் பி.அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், ‘போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படுகிறார். அவர் வகித்து வந்த பொறுப்புகள் ஏடிஜிபி அருணுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது. சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பி. செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்படுகிறார். கீழ்ப்பாக்கம் துணை ஆணையராக இருந்து வந்த கோபி, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எஸ்.பியாக பணியிடமாற்றம் செய்யப்படுகிறார்’ என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.