3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள்,காலனிய காலத்தில் கொண்டு வரப்பட்டவை என்று கூறி, மத்திய அரசு கடந்த ஆண்டு 3 புதிய குற்றவியல் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதன்படி, இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய 3 சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்‌ஷா 2023 மற்றும் பாரதிய சாக்‌ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்தச் சட்டங்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு இச்சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் அனுப்பினார். இந்நிலையில், தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இச்சட்டங்களை நிறுத்தி வைக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “நாடாளுமன்றத்தில் 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த ஜனநாயகத்தின் இருண்ட கால கட்டத்தில் இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே, இந்த சட்டங்களை நிறுத்திவைக்க வேண்டும். இந்த சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.