நீட் முறைகேட்டை கண்டித்து 24ம் தேதி நடைபெற இருந்த திமுக ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

நீட் முறைகேட்டை கண்டித்து 24ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக மாணவரணி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் மறுதேர்வை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து வருகிற 24-ந்தேதி தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நீட் முறைகேட்டை கண்டித்து 24ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக திமுக மாணவரணி அறிவித்துள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.