கூட இருந்தே கழுத்தறுப்பது அண்ணாமலைக்கு கைவந்த கலை: திருச்சி சூர்யா!

“அண்ணாமலை இவ்வளவு நாள் என்னை தம்பியாக பார்த்தார். இனி இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது அண்ணாமலைக்கு கைவந்த கலை” எனக் கூறி பரபரப்பைக் கிளப்பி உள்ளார் திருச்சி சூர்யா.

பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார் திருச்சி சூர்யா. திமுக மூத்த எம்.பி திருச்சி சிவாவின் மகனான சூர்யா, திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசி வந்த நிலையில் பின்னர் பாஜகவில் இணைந்தார். அண்ணாமலை ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த அவர், கட்சிக்குள்ளேயே பலரை விமர்சித்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்நிலையில் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அண்ணாமலைக்கு ஆதரவான கருத்துகளையே திருச்சி சூர்யா சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வந்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திருச்சி சூர்யா, அண்ணாமலைக்கு சப்போர்ட்டாக பாஜக முன்னாள் தலைவரும், 2 மாநில ஆளுநராக இருந்தவருமான தமிழிசையை கடுமையாக விமர்சித்திருந்து பதிவு செய்திருந்தார். இதன் காரணமாக கட்சியை விட்டு நீக்கப்பட்டார். தற்போது அவர் பாஜக தலைவர்களை சரமாரியாக தாக்கி கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

வாய்க்கு வாய் அண்ணன் அண்ணாமலை எனக் கூறி வந்த திருச்சி சூர்யா தற்போது, அண்ணாமலையையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். இன்று திருச்சி சூர்யா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பைக் கிளப்பி உள்ளது. அண்ணாமலையை விமர்சிக்கும் வகையில் சந்தானம் காமெடி காட்சி ஒன்றையும் பகிர்ந்துள்ளார் திருச்சி சூர்யா. திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

உண்மையான தொண்டனை அடையாளம் காண முடியாதவர், உண்மையான தலைவனாக இருக்க முடியாது. கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கெஞ்சுவதற்காக இந்த பதிவுகள் இல்லை. நீங்கள் என்ன, என்னை வேண்டாம் என்று சொல்வது, நான் கூறுகிறேன் எனக்கு பாஜக வேண்டாம். வேண்டவே வேண்டாம்.

என் மேல் நடவடிக்கை எடுக்க நிர்பந்தித்த உத்தமர்களின் யோக்கியதையையும், தமிழ்நாட்டில் பாஜக வளராமல் பார்த்துக் கொள்ள கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்ப்பவர்களையும் அம்பலப்படுத்துவதே தற்போதைய மிஷன். என் மேல் நடவடிக்கை எடுத்த வீராதி வீரர்களுக்கு பாஜகவுக்கு குழி தோண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் ஏன் வரவில்லை. பயமா? அண்ணாமலை.

அண்ணாமலை இவ்வளவு நாள் தம்பியாக பார்த்தார். இனி இந்த தம்பியின் மறுபக்கத்தை பார்ப்பார். உடன் இருப்பவரின் பலம் எதிர்த்து அடிக்கும் போது தான் தெரியும். அதிகபட்சம் அமர் பிரசாத்தையும் கல்யாண ராமனையும் தமிழ்நாடு காவல்துறையை வைத்து கைது செய்தது போல் எனக்கும் வலை விரிப்பார். கூட இருப்பவர்களை கழுத்தறுப்பது தான் அவருக்கு கைவந்த கலை ஆச்சே.. எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.