நீட் நுழைவுத் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும்: பிரதமர் மோடிக்கு மமதா கடிதம்!

நீட் நுழைவுத் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாட்டின் பல மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்துள்ளன. வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் போராட்டங்கள் உக்கிரமாக நடைபெற்று வருகின்றன. நீட் தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசும் மக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது நீட் தேர்வு முறைகேடுகள் அம்பலமாகிவிட்ட நிலையில் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநில அரசுகளும் நீட் தேர்வு முறையே ரத்து செய்ய குரல் கொடுத்து வருகின்றன. இந்த வரிசையில் மேற்கு வங்கமும் இணைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தற்போதைய நீட் தேர்வு முறைகேடுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. வினாத்தாள் விற்பனை, குறிப்பிட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது, நீட் மோசடிகளில் தேர்வு நடத்தும் அதிகாரிகளே ஈடுபடுவது என்பவை கவலைக்குரியது. இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். நாசமாகும் மருத்துவ துறை: இத்தகைய நிகழ்வுகள், பல லட்சக்கணக்கான லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்கால கனவை சிதைத்துவிடுகிறது. இத்தகைய நிகழ்வுகள் நாட்டின் மருத்துவ கல்வியின் தரத்தை பாழ்படுத்துகின்றன. அத்துடன் ஒட்டுமொத்த மருத்துவ துறையையும் சீரழித்துவிடுகிறது.

இத்தருணத்தில் 2017-ம் ஆண்டுக்கு முந்தைய நிலைமையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2017-ம் ஆண்டுக்கு முன்னர் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்துவதற்கு உரிமை இருந்தது. இன்னொரு பக்கம் மத்திய அரசு இடங்களுக்காக மட்டும் மத்திய அரசு தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்தது. இந்த நடைமுறை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இயங்கி வந்தது. 2017-க்கு முந்தைய மாணவர் சேர்க்கை நடைமுறைதான் சரியானதாகவும் இருந்தது. ஒவ்வொரு மாநில அரசும் ஒரு மருத்துவருக்கு கல்வி மற்றும் உதவித் தொகை வழங்கும் வகையில் ரூ50 லட்சம் செலவிடுகிறது. ஆகையால்தான் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் தேவை. மாநில அரசுகளின் எதுவித பங்களிப்பும் இல்லாமலேயே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த கூட்டாட்சி முறைக்கு எதிரானது; ஏற்றுக் கொள்ள முடியாதது.

தற்போதைய நீட் தேர்வு முறையானது ஊழலுக்குதான் வழிவகுக்கிறது. பணக்கார மாணவர்கள்தான் ஆதாயமடையும் நிலைமையை நீட் தேர்வு உருவாக்கி இருக்கிறது. ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் இதனால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகையால் 2017-க்கு முந்தைய- மாநிலங்களே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையை அனுமதிக்க வேண்டும். தற்போதைய நீட் தேர்வு முறையையே ஒழிக்க வேண்டும். இதுதான் மாணவர்களுக்கு நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். இவ்வாறு மமதா பானர்ஜி விவரித்துள்ளார்.